Wednesday, March 11, 2009

"நான் உண்ணாவிரதம் இருந்ததும் இலங்கைக்கு மருத்துவ குழு பயணம்'' ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு கருணாநிதி பதில்

நான் உண்ணாவிரதம் இருந்ததும் இலங்கைக்கு மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு நகைச்சுவையாக உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிவித்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசர அவசரமாக அனுப்பியுள்ளது''- என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா - 2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டில் இருந்து தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009-ம் ஆண்டிலே தானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.

அது மாத்திரம் அல்ல. ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

"வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்தது, அதன் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்கள் என் தலைமையில் தில்லி சென்று பிரதமரைப் பார்த்தது, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது, சட்டப் பேரவையில் "இறுதி வேண்டுகோள்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார். அதன்பின், 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எல்லாமே எப்படி நடந்தது? அவருடைய உண்ணாவிரதத்துக்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா?

அரிசி, பருப்பு, படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை தனித்தனி சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?

"அவரது உண்ணாவிரதத்தால் நான் கதி கலங்கிப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். ஆம். கதி கலங்கித் தான் போய் விட்டேன். தனது உண்ணாவிரதத்துக்கு உலக அளவில் வரவேற்பாம். முதலில் இப்படித் தான் தனக்கு உலக அளவில் விருது கொடுப்பதாக புரளியைக் கிளப்பினார்.

ஏதோ, இரண்டு இடங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைப் புலிகள் பற்றி ஜெயலலிதாவுக்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணாவிரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதி கலங்கி விட்டேனாம். என் செய்வது? ``கதாநாயகி நடிகை'' காமெடி நடிகையாக ஆகிவிட்டார்! கஷ்ட காலம்!

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது. இந்த உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல், ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு உண்டியல் வசூல் செய்துள்ளார்.

எப்படியோ போகட்டும். தமிழக அரசின் சார்பாக தொகையாகக் கூட அல்ல; வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறை தானா? என்று தான் கேட்டிருந்தேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். மேலும்.......

பாகிஸ்தானில எதிர்க்கட்சி தலைவர்கள் கூண்டோடு கைது: இம்ரான்கான் தலைமறைவு


வைகோவுடன் மோதல்: ம.தி.மு.க.வில் இருந்து மு.கண்ணப்பன் விலகினார்

1 comment: